ஒகேனக்கல், ஆடவை (ஆனி) 12-
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 50,000 கன அடிக்கு மேல் அதிகரித்துள்ளதால், குளிக்கவும் மற்றும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., இன்று (26.06.2025 – ஆனி 12) அறிவித்துள்ளார்.
இன்று மாலை 4.00 மணி நிலவரப்படி வினாடிக்கு 42,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலை 7.00 மணிக்கு 50,000 கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால், வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் ஒகேனக்கல் காவிரியில் குளிக்கவும், பரிசல் சேவைகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்றும், அனைத்து அரசு துறைகள் மற்றும் ஆபத்துநிவாரண அமைப்புகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் ஆட்சியர் வலியுறுத்தினார்.