தருமபுரி, ஜூன் 12-
தருமபுரி மாவட்டத்தில், 2025-26 ஆம் ஆண்டுக்கான கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்காக 50 விழுக்காடு மானியத்துடன் சிறிய அளவிலான பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஒர் அலகுக்கு ₹1,65,625 மானியம் வழங்கப்படும். பயனாளிகள் கோழிக் கொட்டகை கட்டுதல், உபகரணங்கள் வாங்குதல், தீவனம் வாங்குதல் ஆகிய செலவுகளுக்கு 50% பங்களிப்பை வங்கி அல்லது சொந்த நிதியின் மூலம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 நாட்டுக்கோழி குஞ்சுகள் (4 வார வயது) மானிய விலையில் வழங்கப்படும்.
விதவைகள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஆதார் நகல், நில ஆவணங்கள், நிதி ஆதார ஆவணங்கள், உறுதிமொழி உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் 20.06.2025க்குள் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு தருமபுரி கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகங்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக