தருமபுரி, ஜூன் 06-
தருமபுரி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்காக, வரும் ஜூன் 24, 2025 அன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
இம்முகாம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக நடத்தப்படுகிறது. திருநங்கை நலவாரியத்தின் வாயிலாக, திருநங்கைகள் அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய தொழில் மானியத் தொகை, கல்வி உதவித் தொகை, சுய உதவிக்குழு பயிற்சி மற்றும் உதவி, காப்பீட்டுத் திட்டங்கள், இலவச தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல நலத்திட்டங்களை பெறலாம்.
மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள திருநங்கைகள் பற்றிய தரவுகளை சேகரிக்க கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது. தமிழக அரசு “புதுமைபெண்” மற்றும் “தமிழ்ப்புதல்வன்” திட்டத்தில், உயர்கல்வி பயிலும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினத்தவர்களுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, 6 முதல் 12ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் கல்வி படித்திருக்க வேண்டிய நிபந்தனையில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
முகாமில் பங்கேற்க விரும்பும் திருநங்கைகள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டைகள், கல்வி சான்றிதழ்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆதார ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக