தருமபுரி, ஆடவை (ஆனி) 09-
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டம் முழுவதிலிருந்தும் பொதுமக்கள் சமர்ப்பித்த 557 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குடிநீர், சாலை, பேருந்து சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பட்டா மாற்றம், சிட்டா பெயர் திருத்தம், குடும்ப அட்டை, வாரிசு சான்று, வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் போன்ற கோரிக்கைகள் மனுக்களாக வந்தன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அனுப்பி, உரிய தீர்வுகள் உடனுக்குடன் வழங்க மாநில முதலமைச்சரின் அறிவுரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இதன் பின்னர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில், 10 பயனாளிகளுக்கு ரூ.67,000 மதிப்புள்ள 10 LPG தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன.
அதேபோல், இலவச தையல் இயந்திரம் கோரிய ஒரு பயனாளிக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர்.கவிதா, தனித்துணை ஆட்சியர் திரு. சுப்பிரமணி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு. சையது முகைதீன் இப்ராகிம், மற்றும் பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.