பாலக்கோடு, ஆடவை (ஆனி) 09-
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள பி.செட்டிஅள்ளி ஊராட்சி, கரம்பு கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் 200 மரக்கன்றுகள் நடும் விழா ஜூன் 24 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை ஏற்பாடு செய்தது. "மரம் வளர்ப்போம் – மழை பெறுவோம்" என்ற முழக்கத்தை நோக்கமாகக் கொண்டு, தருமபுரி மாவட்டம் முழுவதும் மரம் நடும் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். நட்ட மரங்களுக்கு சொட்டு நீர் பாசன வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.
இந்த மரம் நடும் விழா, பி.செட்டிஅள்ளி ஊராட்சியில் உள்ள கரம்பு கிராமத்தின் அரசுக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் முருகன் தலைமையாற்றினார். அவருடன் இணைந்து செல்வராஜ், சீனிவாசன், பழனி, மகேந்திரன், மாரிமுத்து உள்ளிட்ட பொறுப்பாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி, பஞ்சாயத்து செயலாளர் கோவிந்தன் மற்றும் பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். பசுமை வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது.