தருமபுரி, ஆடவை (ஆனி) 11-
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் 862 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.18.77 கோடி மதிப்பில் மானியம் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
தாட்கோவின் தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி, நிலம் வாங்கும் திட்டம், மருந்தகம் மற்றும் கிளினிக் அமைப்பது போன்ற பல்வேறு திட்டங்கள் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்திற்கு முழுமையான பொருளாதார ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.
2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், ஆண்டுதோறும் ஏராளமான பயனாளிகள் தங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு தாட்கோ நிதியைப் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக, சுயவேலைவாய்ப்பு திட்டம், மருந்தகம் அமைப்பது, நிலம் வாங்குவது போன்றவற்றுக்கு லட்சக்கணக்கில் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தாட்கோ நலத்திட்டங்களுக்கு https://newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனவும், சமூக மேம்பாட்டில் தாட்கோ முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.