செட்டிகரை கிராமத்தில் மயானத்திற்கு சாலை இல்லாததால் சிரமம் – ஒத்தையடி பாதையில் இறந்தவரை எடுத்து சென்ற அவலம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 மே, 2025

செட்டிகரை கிராமத்தில் மயானத்திற்கு சாலை இல்லாததால் சிரமம் – ஒத்தையடி பாதையில் இறந்தவரை எடுத்து சென்ற அவலம்.


தருமபுரி, மே 25 –

தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிகரை கிராமத்தில், மயானத்திற்கு செல்லும் சாலை இல்லாததால், இறந்தவர்களை ஒத்தையடி பாதை வழியாக எடுத்து செல்லும் அவலம் தொடர்கிறது. இக்கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவசாய கூலி தொழிலாளர்களாக செயல்பட்டு வருகின்ற இக்குடும்பங்கள், சமுதாய அடிப்படையில் பலவிதமான நலிவுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த கிராம மக்களுக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயானமே ஒரே இடமாக இருப்பதால், இறந்தவர்களின் உடலை அங்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், அந்த மயானத்திற்கான நேரடி சாலை இல்லாத காரணத்தால், ஏரி ஓரமாக உள்ள ஒத்தையடி பாதையை பயன்படுத்தி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஊர்ந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.


மழைக்காலங்களில் இந்த பாதை முழுமையாக சேறும் சதையுமாக மாறுவதால், இறந்தவர்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது மிகுந்த சிரமமாகிறது. இந்நிலையில், செட்டிகரை கிராமத்தை சேர்ந்த ரத்தினா (வயது 65) உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அவரை இன்று (மே 24) பிற்பகல் 3 மணிக்கு மயானத்திற்கு எடுத்து செல்லும்போது பெய்த மழையால் பாதை மிகவும் சிரமமானதாக மாறி, மக்கள் வெறுமனே ஒத்தையடி பாதையில் தவறிக்கொண்டே சென்று இறுதியாக மயானத்தில் அடக்கம் செய்தனர்.


இதைப் பற்றிப் பேசும் இக்கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி கூறியதாவது:

“ஏற்கனவே சுடுகாட்டுக்கான சாலை தேவையை மனு மூலம் தெரிவித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக நாங்கள் இந்த சிரமத்தை அனுபவித்து வருகிறோம். மழை காலங்களில், சுடுகாட்டுக்கு செல்ல முடியாமல், ஏரிக்கரையின் ஓரமாகவே இறந்தவர்களை புதைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இது மிகுந்த வேதனையைக் கொடுக்கும்.”


இதனைக் கருத்தில் கொண்டு, பொது மக்களின் நலனை கருதி, நிரந்தரமாக சாலை வசதி அமைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad