
தர்மபுரி மாவட்டத்தின் பாலக்கோடு அருகேயுள்ள செல்லியம்பட்டி ஊராட்சியின் வரகூர் கிராமத்தில் அமைந்துள்ள சோலைகுட்டை ஏரி (7.5 ஏக்கர் பரப்பளவு) பல ஆண்டுகளாக சுற்றுவட்டார கிராமங்களான வரகூர், புலிகரை கொல்லப்பட்டி, சங்கம்பட்டி, செல்லியம்பட்டி, கோவிலூர் மக்களுக்கு முக்கிய நீராதாரமாக இருந்து வந்துள்ளது.
இருப்பினும், கடந்த சில காலமாக ஏரி முழுவதும் சீமை கருவேல மரங்கள் பரவி, காடுபோன்ற நிலை உருவாகியதால் நீர்ப்பிடிப்பு பகுதி பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் தொடர்ந்து மரங்களை அகற்றி ஏரியை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த பின்னணியில், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதிஷ் அவர்களின் வழிகாட்டுதலின் படி, பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா முட்செடிகள் மற்றும் கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தொடங்கி வைத்தார். இந்த முயற்சியில், அன்பரசு காண்ட்ராக்டர், டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை (பாலக்கோடு), பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தர்மம் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் சேர்ந்து சோலைகுட்டை ஏரியில் உள்ள கருவேல மரங்கள் மற்றும் முட்களை அகற்றி, 500 மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊராட்சி மக்கள் முனைப்பாக பங்கேற்றனர்.
மேலும், டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை, பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை மற்றும் தர்மம் அறக்கட்டளை ஆகியவை இதற்கு முன் மேக்லாம்பட்டி ஏரி, கடமடை சோமனள்ளி ஏரி போன்றவற்றை சீரமைத்துள்ளன. இப்போது நான்காவது ஏரியாக சோலைகுட்டை ஏரியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு, பிறருக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றன. இந்த முயற்சி ஏரியின் நீடித்த உயிர்ப்புக்கு வழிவகுக்கும் என்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் வளத்திற்கான சமூக உணர்வை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக