பாலக்கோடு, மே 4:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள சோமனஅள்ளி ஏரி, 22 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி சோமனஅள்ளி, பி.கொல்லஅள்ளி, முருக்கம்பட்டி, கரகதஅள்ளி, மோதுகுலஅள்ளி போன்ற கிராமங்களுக்கான முக்கிய நீராதாரம் ஆக விளங்குகிறது. கடந்த காலங்களில் பராமரிப்பு இல்லாத காரணத்தால், இந்த ஏரியின் முழு பரப்பிலும் சீமை கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகள் முளைத்து காடாக மாறியிருந்தது. இதனால், பொதுமக்கள் நீர்தொட்டியின் மீள்பயன்பாட்டுக்காக இந்த மரங்களை அகற்றக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
இதற்கமைய, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திரு. சதீஷ், இ.ஆ.ப. அவர்களின் ஆலோசனையின் பேரில், டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை, பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தர்மம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து சோமனஅள்ளி ஏரியில் மரங்களை அகற்றும் பணியில் மனிதவலுடன் ஈடுபட்டு வருகின்றன. இந்த சமூகப்பணியில் சமூக ஆர்வலர்கள், ஊராட்சி பொதுமக்கள் இணைந்து பங்களித்து வருகின்றனர்.
இதற்கு முன், இந்த அறக்கட்டளைகள் மேக்லாம்பட்டி ஏரி மற்றும் கரகதஅள்ளி ஏரிகளை சீரமைத்துள்ளன. இப்போது சோமனஅள்ளி ஏரி மூன்றாவது திட்டமாக முன்னெடுக்கப்பட்டு மற்ற சமூகங்களுக்கு முன்மாதிரியாக உருவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக