படித்த வேலைவாய்ப்பற்றோருக்கான அரசு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஏப்ரல், 2025

படித்த வேலைவாய்ப்பற்றோருக்கான அரசு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு.


தருமபுரி, ஏப்ரல் 9:

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பற்றோர் நலனுக்கான சிறப்பு திட்டமாக, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர், இளம்பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், 2024-2025ஆம் ஆண்டிற்கான காலாண்டுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

அரசுத் திட்டவாகை மூலம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மாதம் ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ரூ.300, மேல்நிலைப்பள்ளி படித்தவர்கள் ரூ.400, மற்றும் பட்டதாரிகள் ரூ.600 என உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் என்போருக்கு, கல்வித் தகுதியின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.1000 வரை உதவித்தொகை அளிக்கப்படுகிறது.


இந்த உதவித்தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவைப் புதுப்பித்து இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு வருட பதிவு போதுமானதாகும். சாதாரண விண்ணப்பதாரர்களின் வயது 40-க்கும் கீழாகவும், பட்டியலின பிரிவினரின் வயது 45-க்கும் கீழாகவும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரம்பும் விதிக்கப்படவில்லை.


விண்ணப்பதாரர்கள் தற்போது நேரடியாக பள்ளி அல்லது கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கக் கூடாது. அஞ்சல் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள் மட்டும் தகுதியுடையவர்களாக கருதப்படுவர். தொழில்நுட்பக் கல்வி (பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம் உள்ளிட்டவை) முடித்தவர்கள், அல்லது அரசு/தனியார் நிறுவனங்களில் ஊதியம் பெறும் பணியில் இருப்பவர்கள் இந்த உதவித்தொகைக்கு தகுதியற்றவர்களாகக் கருதப்படுவர்.


இத்திட்டத்தின் கீழ் முதன்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள், தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக விண்ணப்பப் படிவங்களை பெற்று, தேவையான ஆவணங்களுடன் 28.05.2025 தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் திறக்கப்பட்ட கணக்குப்புத்தகப் பிரதியும் இணைக்கப்பட வேண்டும்.


மேலும், ஏற்கனவே உதவித்தொகையை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவடைந்த பிறகு, தொடர்ச்சியாக பெற சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்காதவர்கள், அதனை 28.05.2025-க்குள் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்து உள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad