இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 388 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் அரூர் வட்டங்களை சேர்ந்த 30 நபர்களுக்கு 24.00 இலட்சம் மதிப்பீட்டில் இணையவழி வீட்டுமனைப்பட்டாகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். மேலும், பொது விநியோகத்திட்டம்-2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய விற்பனையாளர் மற்றும் எடையாளர்களுக்கு பரிசு மற்றும் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
பின்னர், இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்த தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கோணங்கிநாயக்கானஅள்ளி கிராமத்தை சேர்ந்த திரு.சன்னசாமி இரண்டு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு இன்றைய தினமே மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூபாய் 11,500/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஆர்.கவிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.லலிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

