மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (17.8.24) தருமபுரியில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.வ.தனுசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் பங்கேற்றார். மாவட்ட செயலாளர் அ. குமார் அறிக்கை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
- தருமபுரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டியுள்ள விவசாயிகளுக்கு எதிராக வனத்துறையினர் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
- புறம்போக்கு நிலங்களில் 70 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து சாகுபடி செய்து வரும் பழங்குடி அல்லாதவருக்கு பட்டா வழங்க வன உரிமைச் சட்டம் வழிவகை செய்துள்ளது. இந்நிலையில் பென்னாகரம் வட்டம் தொண்ணகுட்ட அள்ளியில் விவசாயிகளின் சாகுபடி நிலத்தில் முள் செடி நட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, பாலக்கோடு வட்டம் ஜக்கசமுத்திரம், ஜிட்டாண்டள்ளி ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் நோக்கில் மரங்களை ஏலம் விடுவதற்கான முயற்சிகளை வனத்துறை தொடங்கியுள்ளது. காலம் காலமாக புறம்போக்கு நிலத்தில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளை வெளியேற்றும் வனத்துறையினரின் செயல்பாட்டை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
- பென்னாகரம் வட்டம் ஏமனூர் பகுதியில் மேட்டூர் அணை கட்டும் பொழுது குடியமர்த்தப்பட்ட விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என இக்கூட்டம் மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறது.
- இன்றைய தினம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளதை வரவேற்கிறோம். அதேபோல தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி உபரி நீரை ஏரிகளில் நிரப்பி நிலத்தடி நீரைச் செறிவூட்டும் திட்டத்தை விரைந்து அமலாக்க தமிழ்நாடு முதல்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக் கொள்கிறது.
- மாவட்டத்தில் பல இடங்களில் நுண் நிதி நிறுவனங்கள் மகளிர் குழுக்கள் மூலம் பெண்களுக்குக் கடன் வழங்கியுள்ளன. இக்கடன்களை வசூலிப்பதில் பல்வேறு நிர்பந்தங்களைக் கொடுத்து வருகின்றன. இதனால் பெண்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, நுண் நிதி நிறுவனங்கள் கடன் வசூலில் கெடுபிடி செய்வதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் இரா. சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், எம்.முத்து, சி.நாகராசன், சோ.அருச்சுனன், வே. விசுவநாதன், ஆர்.சின்னசாமி, வி.ரவி, ஆர். மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
.gif)

