தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தொடங்கி வைத்து, 22 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 2 கோடியே 67 இலட்சம் கல்விக்கடன் உதவிகளை வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (22.08.2024) தொடங்கி வைத்து, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கடன் உதவிகளை வழங்கினார்.
பின்னர் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் கல்விக்கடன் வழங்கி பேசும்போது தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களும் பயனடையும் வகையிலும், உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கினை அதிகரிக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இன்றையை தினம் தருமபுரி மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு விரும்பமான உயர் கல்வி பயில வழிவகை ஏற்படுத்தும் வகையில் நல்லம்பள்ளி, ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டது.
கல்வி வளர்ச்சியே ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு அடிப்படையாகும். தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்விக்கடன் என்பது மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறையில் கல்வி பெற்று முன்னேற்றம் அடைவதற்கும், அவர்களின் குடும்பத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காகவும் அவசியமாவதால், அரசு கல்விக்கடனுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது.
மாணவர்களின் கல்லூரிக் கனவை நனவாக்கிட எளிதாக கல்விக்கடன் பெறுவதற்காக வித்யாலக்ஷ்மி போர்ட்டல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2023-2024 ஆண்டில் 1009 மாணவர்களுக்கு ரூபாய் 23 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
2024-25 ஆண்டில், தருமபுரி மாவட்ட மாணவர்களின் கல்விக்கடனுக்காக 1568 நபர்களுக்கு சுமார் ரூபாய் 22.44 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 01.04.2024 முதல் 30.06.2024 வரையில் 121 நபர்களுக்கு சுமார் ரூபாய் 6 கோடியே 23 இலட்சமும், 01.07.2024 முதல் தற்போது வரை 77 நபர்களுக்கு ரூபாய் 5 கோடியே 11 இலட்சமும் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய கல்விக்கடன் முகாமில் 22 மாணவர்களுக்கு ரூபாய் 2 கோடியே 67 இலட்சம் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 2024-2025 ஆம் நிதியாண்டில் இதுவரை மொத்தம் 220 மாணவர்களுக்கு. ரூபாய் 13 கோடியே 83 இலட்சம் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய தினம் நடைபெற்ற கல்விக்கடன் முகாமில் மாணவர்கள் பயன் பெறுவதற்காக, வித்யாலக்ஷ்மி போர்ட்டலில் நேரடியாக விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்து தரப்பட்டுள்ளது. மாவட்ட முன்னோடி வங்கி - இந்தியன் வங்கி மற்றும் அனைத்து வங்கியாளர்களும் முகாமில் பங்குபெற்றுள்ளனர். மாணவர்கள் கல்விக்கடன் பெறுதல் குறித்த சந்தேகங்கள் ஏதும் இருந்தால் நேரடியாக வங்கியாளர்களை அணுகி தங்கள் விவரங்களை கல்விக்கடனுக்காக விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் கல்லூரிப் படிக்கும் காலத்திலேயே கல்விக்கடனின் வட்டித்தொகையை மட்டும் செலுத்துவதன் மூலம் கடன்சுமையைக் குறைக்கலாம். மேலும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் மூலம் பெறும் நிதியினை முறையாக பயன்படுத்துவதன் மூலம் மாணவர்கள் தங்கள் கல்விக் கனவை நிறைவேற்றிக் கொள்வது மட்டுமல்லாது, எதிர்கால உயர்வான வாழ்விற்கான அடித்தளமாகவும் இந்நிதி அமையும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், துணை ஆட்சியர்கள் (பயிற்சி) திருமதி.சௌந்தர்யா, செல்வி.கார்த்திகா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பிரசன்னா பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ராமஜெயம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.சிவகுமார், ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.பாலசுந்தரம், வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள், கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

.jpg)