இத்திட்டத்தில் தற்போது தருமபுரி மாவட்டத்திற்கு 6 ஊர்திகள் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் மூலம் தொலைதூர கிராமங்களுக்கும், கால்நடை மருந்தகங்கள் இல்லாத கிராம பகுதிகளுக்கும், கால்நடை மருத்துவ சேவைகளை அந்தந்த இடத்திலேயே வழங்கிடவும், அப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் நோக்கத்துடன் துவக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல், ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை ஆய்வு, சினை பிடிக்காத மாடுகளுக்கு சிகிச்சை, கால்நடை மருத்துவ முகாம்களில் கலந்துகொள்ளுதல், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பங்கேற்று உதவுதல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும்.
இந்நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் வார நாட்களில் ஞாயிறு தவிர பிற நாட்களில் காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் குறிப்பிடப்பட்ட வழித்தடங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு தேவையான சேவைகள் வழங்கப்படும். மேலும், 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்பட்சத்தில் அவசர அழைப்புகளை ஏற்று மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் இவ்சேவையை கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

