Type Here to Get Search Results !

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 576 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் 15 உபதேசியாளர்கள், பணியாளர்களுக்கு சிறும்பான்மையினர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் வழங்கினார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (22.07.2024) நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். 


இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 576 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் 15 உபதேசியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த தாய் மற்றும் தந்தை இழந்த செல்வி.பிரதிக்சா (வயது 13) த/பெ.குணசேகரன் என்பவர் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தனது பாட்டியுடன் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் உதவி கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு அளித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கையாக சேலம் மாவட்ட குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டு, தனது பாட்டி பாப்பாத்தி என்பவரின் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கப்பட்டது.


மேலும், பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பில் உடனடியாக சேர்க்கப்பட்டார். இக்குழந்தைக்கு இருதயத்தில் இருந்த பிரச்சனை காரணமாக மேல் சிகிச்சைக்காக சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு கடந்த 12.7.2024 அன்று இருதய அறுவை சிகிச்சை செய்து மேற்கொள்ளப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளார்.


மேலும் செல்வி.பிரதிக்சா என்பவரின் தொடர் சிகிச்சை பரிசோதனைக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் பென்னாகரம் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்களும் இணைந்து ரூ.1,00,000/- தொகை நன்கொடையாக சேகரித்து, மாணவி பெயரில் தபால் நிலைய சேமிப்பு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, வங்கி கணக்கு புத்தகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாணவியின் பாட்டியிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினார்.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திருமதி.தனப்பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சையது முகைதீன் இப்ராகிம், வட்டாட்சியர் திரு.சுகுமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies