எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 மார்ச், 2024

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டத்தில் துணை வாக்குச்சாவடி நிலையங்களை கண்டறிதல் மற்றும் வேட்பாளர்களின் செலவினங்களின் விலைப்பட்டியல் நிர்ணயம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் துணை வாக்குச்சாவடி நிலையங்களை கண்டறிதல் மற்றும் வேட்பாளர்களின் செலவினங்களின் விலைப்பட்டியல் நிர்ணயம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.03.2024) நடைபெற்றது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, 1500-க்கு மேற்பட்ட வாக்காளர்கள் ஒரே வாக்குச் சாவடி நிலையத்தில் இருக்கும் பட்சத்தில், அந்த வாக்குச் சாவடிகளை கண்டறிந்து துணை வாக்குச் சாவடிகளை உருவாக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்களிடமிருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டது.


மேற்காணும் பொருள்குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் வாக்குச் சாவடி நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.  தருமபுரி மாவட்டத்தில் 1500-க்கு மேல் வாக்காளர்கள் கொண்ட வாக்குச் சாவடி நிலையங்கள் ஏதும் இல்லை என்ற காரணத்தினால் புதியதாக துணை வாக்குச்சாவடி நிலையங்களில் ஏதும் உருவாக்கப்படவில்லை. 


தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1489 வாக்குச் சாவடிகளில் கட்டடம் பழுதான காரணத்தினால், 24 வாக்குச் சாவடிகள் ஏற்கனவே இயங்கி வந்த கட்டடத்திலிருந்து வேறொரு கட்டடத்திற்கு/இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.  மேலும், எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் அன்றாட செலவினம் தொடர்பான விலைப் பட்டியல் குறித்தும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டது என தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.வில்சன் ராஜசேகர், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் (பொ) திரு.ஐ.சையது மொகதின் இப்ராகின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.எஸ்.பிரகாசம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) திரு.எம்.அருண்மொழிதேவன், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.தாமோதரன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.அ. அசோக்குமார், அனைத்து வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad