தெற்கு மண்டல இந்திய விமான நிலைய ஆணையத்தில் அறிவிப்பு கடந்த டிசம்பர்-2023 மாதம் வெளியிடப்பட்டது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூலம் நடத்தப்பட உள்ள இத்தேர்வில் இளநிலை உதவியாளர் (தீயணைப்பு பணி), இளநிலை உதவியாளர் (அலுவலகம்), முதுநிலை உதவியாளர் (மின்னணுவியல்) மற்றும் முதுநிலை உதவியாளர் (கணக்கு) போன்ற பல்வேறு காலிபணியிடங்களுக்கு 27.12.2023 முதல் 26.01.2024 வரை விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக (பொது பிரிவினர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், இதர பிரிவினர்) செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், முன்னாள் இராணுவத்தினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் பெருமளவில் விண்ணப்பிக்குமாறும், மேலும் இது குறித்த விவரங்களுக்கு www.aai.aero என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.