தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார்கள்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா 2023 நாளை 15.08.2023 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இச்சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் காலை 9.05 பணிக்கு தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களைக் கௌரவித்து, பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கவுள்ளார்கள்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள். அதனைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இயற்கையை பற்றிய கிராமிய நடனம், தேசப்பற்று பாடல்கள், மொழி பற்று பாடல், தமிழர் மரபுக்கலை உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர். இவ்விழாவிற்கான பணிகளை மாவட்ட நிர்வாகமானது வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தருமபுரி நகராட்சி, பொதுப்பணித்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகிறது.
மேலும், நாளை நடைபெற உள்ள சுதந்திர நினந்தையொட்டி காவல்துறையினரால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.