மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்.


தருமபுரி மாவட்டத்தில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவற்றை முறையாக பாதுகாத்து உரிய எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்து இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, மாவட்டத்தில் கைவிடப்பட்ட மற்றும் செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவை மனிதர்கள், விலங்குகள் மற்றும் குறிப்பாக நமது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்துக்களை ஏற்படுத்தும் காரணங்களாக  அமைகின்றன. இதைக் கருத்தில் கொண்டு முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மதிப்பிற்குரிய தலைமைச் செயலாளர் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள்.


தருமபுரி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்திடவும், அவற்றின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எளிதாக்க, அவற்றின் இருப்பிடங்கள், பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களின் விரிவான பதிவைப் பராமரிக்கவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளின் சாத்தியமான அபாயங்களைக் குறைக்க, அனைத்து திறந்தவெளி கிணறுகளையும், செயலிழந்த ஆழ்துளைக் கிணறுகளையும் திறம்பட பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், அவற்றால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் அமைந்திருத்தலை உறுதி செய்தல், இதேபோல், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளால் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய விபத்துகளைத் தடுத்திடும் வகையில், அதனை உடனடியாக மூடவும் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், கைவிடப்பட்ட குவாரி குழிகளால் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அவற்றை குளிப்பதற்கு பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் உடனடியாக அவற்றை சுற்றி வேலிகள் அமைத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை குவாரிகளின் குத்தகைதாரர்கள் மேற்கொள்ள அறிவுறுத்திட  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


மேலும், நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளால் ஏற்படும் கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் அகழிகளை நிவர்த்தி செய்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பைக் உறுதி செய்திடவும், அவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில்  ஓட்டுநர்களுக்கு மிகவும் தெரியும் வகையிலும், வாகனங்கள் தற்செயலாக சாலையில் சறுக்கி பள்ளங்களில் விழுவதை தடுக்கும் வகையிலும் வலுவான தடுப்புகளை நிறுவவும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக திறந்தவெளி கிணறுகள், கட்டுமான குழிகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் குவாரி குழிகளுக்கு அருகில் எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில்  எச்சரிக்கை பலகைகள் வைத்திடவும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை தொடர்புடைய  உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உறுதி செய்யுதிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad