தருமபுரி மாவட்டத்தில் "தமிழ்நாடு நாள் விழா-ஜூலை 18 முன்னிட்டு” பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 (1967) ஆம் நாளை தமிழ்நாடு திருநாளாக இனி கொண்டாடப்படும் என அறிவித்தார்கள். அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு நாள் ஜூலை 18 ஆம் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ”தமிழ்நாடு நாள் விழா-ஜூலை 18 முன்னிட்டு” "தமிழ்நாடு நாள்" உருவான வரலாறு தொடர்பாக பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்விழிப்புணர்வு பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ”எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்”, தமிழன் என்று சொல்லடா - தலைநிமிர்ந்து நில்லடா”, ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்றனர். இப்பேரணியானது அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி, 4-ரோடு, பெரியார் சிலை வழியாக அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது.
இதனை தொடர்ந்து, தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ”தமிழ்நாடு நாள் விழா-ஜூலை 18 முன்னிட்டு” தமிழ்நாடு நாள் முக்கியத்துவத்தினை இளைய தலைமுறையினர் அறியும் வகையிலும், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்புகளை பொதுமக்கள் அறியும் வகையிலும், மேலும் தமிழ்நாடு அரசின் ஈராண்டு ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அரசின் பல்வேறு திட்டங்களை அனைவரும் அறியும் வகையிலும் செய்திமக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
மேலும், இக்கண்காட்சியில் பள்ளி கல்வித்துறை மற்றும் அறக்கட்டளையின் சார்பில் 100க்கும் மேற்பட்ட அரியவகை மூலிகை தாவரங்கள், செடிகள், 100 வகையான மரங்கள், 200க்கும் மேற்பட்ட விதைகள், காய்கறிகள், கிழங்கு வகைகள், பருப்பு வகைகள் போன்ற பல்வேறு மூலிகைகள் தொடர்பாக தொகுப்புகள் அடங்கிய தாவரவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு பின்னர், தமிழ்நாடு நாள் விழா - ஜூலை 18 முன்னிட்டு” நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 6 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000/-, 2-ஆம் பரிசு ரூ.7,000/-, 3-ஆம் பரிசு ரூ.5,000/-பரிசுத்தொகைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக, தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வள்ளல் அதியமான் மற்றும் ஔவையார் திருவுருவ சிலைகளுக்கு ”தமிழ்நாடு நாள் விழா - ஜூலை 18 முன்னிட்டு” மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
.gif)



