தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பிலியனூர் அக்ரஹாரம் கிராமத்தில் புகழ்பெற்ற பெற்ற முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 2-வது செவ்வாய் கிழமை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இவ்வாண்டும், மார்கழியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவிழாவிற்கு, பென்னாகரம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமில்லாமல், தருமபுரி, அரூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

இக்கோவில் திருவிழாவுக்கு வந்த பக்தர்கள் குடும்பத்துடன், விரதமிருந்து அலகு குத்தியும், கரகம் எடுத்தும் ஊர்வலமாகவும், மாவிளக்கு எடுத்து முனியப்பன் வேடமிட்டு, குதிரையுடன் ஊர்வலமாக ஆட்டம் பாட்டத்துடன் வந்தனர், பெண்கள் விரதம் இருந்து கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து தங்களது பல்வேறு வகையான நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். மேலும் முனியப்பன் கோவில் திருவிழாயொட்டி, பி.அக்ரஹாரம் பகுதியில் நூற்றுக்கணக்கான சிறு, சிறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த திருவிழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முனியப்ப சுவாமியை வணங்கி வழிபட்டனர்.
திருவிழாவில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்கவும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், பென்னாகரம் காவல் துறையின் சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தருமபுரி-ஒகேனக்கல் பிரதான சாலையில் முனியப்பன் ஆலயம் அமைந்திருப்பதால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
