தமிழக கர்நாடகா எல்லையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதால் தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நேற்று வினாடிக்கு 38000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரம் கன அடி நீர் நேற்று வெளியேற்றப்பட்டன.
அதேபோல தமிழக காவிரி எல்லை பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மலைப் பகுதிகளில் பெய்த மழையினால் காற்றாற்று வெள்ளம் உருவாகி காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள மெயின் அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிச் செல்கின்றன.
மேலும் இந்த நீர்வரத்து அதிகரித்தால் சுற்றுலாப் பயணிகள் பரிசலில் செல்லவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. தமிழக கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே பெய்த கன மழையின் காரணமாக தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

