தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (12.09.2022) நடைபெற்றது.
இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், ஆக்கரமிப்புகள் அகற்றுதல், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, புதிய வீடு, புதிய மின் இணைப்பு வசதி, முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 360 மனுக்கள் வரப்பெற்றன.
இம்மனுக்களை பெற்றுகொண்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கோவிட் பெருந்தொற்றினால் தாய், தந்தை இருவரையும் இழந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 குழந்தைகளுக்கு மாதம் ரூ.3000 வீதம் ஜூன்-2021 முதால் மார்ச்-2022 வரை 10 மாதங்களுக்கு ஒரு குழந்தைக்கு தலா ரூ.30,000/- வீதம் 9 குழந்தைகளுக்கும் மொத்தம் ரூ.2.70 இலட்சம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான காசோலைகளை அக்குழந்தைகளுக்கு வழங்கி, அனைவரும் நன்றாக படிக்க வேண்டும், உங்களின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கி கொள்வதற்கு கல்வி ஒன்றே சிறந்தது என்பதை உணர்ந்து நன்கு படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று, உயர்ந்த இடத்தை அடைந்திட சிறப்பான கல்வியை கற்க வேண்டுமென அறிவுரை வழங்கினார்கள்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் திருமதி. வி.கே.சாந்தி, உதவி ஆணையர் (கலால்) திரு.தணிகாசலம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.ஆர்.கே.கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.வி.ராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.எம்.செல்வம், குழந்தைகள் நலக்குழுத் தலைவர் திரு.டி.எஸ்.சரவணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
