இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் முறைபடுத்துதல் சட்டம் - 2014 குறித்த மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகின்றது.
அரசு குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மகளிருக்கான தங்கும் விடுதிகளை கட்டாயம் பதிவு செய்து நடத்திட வேண்டுமென ஆணையிட்டுள்ளது, மேலும், அரசால் வருக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வீட்டைவிட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள். வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள், சீறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிப்புரியும்பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் உள்ளுறைவோர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நலனுக்காக வழிகாட்டுநெறிமுறைகள் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அரசாணை நிலை எண் 33 நாள் - 2606.2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 2005-ஆம் ஆண்டிற்கான குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம் பிரிவு 17(1)ன் அடிப்படையில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டப்பிரிவு 13(1)ன் அடிப்படையில் குழந்தைகளின் பாதுகாப்பினை கண்காணிக்கவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும், ஆணையத்திற்கு அதிகாரங்கள் அளிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளரிளம் பெண்கள், சிறார் இல்லங்கள், மாணவிகள் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் தங்குகின்றனர். மேற்கண்ட அமைப்புகள் பொதுவாக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழில்கல்வி பயிற்சி நிறுவனங்கள் / தொழிற்சாலைகள் தனியார் மற்றும் தனி நபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி / இல்லங்கள் நடத்தும் நிறுவனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உடனடியாக உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தங்கும் விடுதிகள் மேற்படி சட்டத்தின்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மூலமும் 18 வயதிற்கு மேற்பட்ட வளர் இளம் பெண்கள் மற்றும் பணிபுரியும் பெண்கள், விடுதிகளை மாவட்ட சமூகநல அலுவலர் மூலமாகவும், கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு விடுதிகள் உரிய விதிகளை பின்பற்றி அவர்கள் விடுதி நடத்த உரிமை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு உரிமை பெறவில்லை எனில் மேற்படி உரிமையினை 1 மாத கால அவகாசத்திற்குள் பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சில விடுதிகளில் உரிமை காலாவதியாகி இருப்பின் அதனையும் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதன்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழில்கல்வி பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்கள் / தொழிற்சாலைகள் தனியார் மற்றும் தனி நபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் இத்தகைய அமைப்புகள் உடனடியாக பதிவு செய்திட உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்விடுதிகளை முறைப்படுத்தி கண்காணித்திட தமிழக அரசால் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, அரசின் விதிமுறைகளின் படி பதிவு செய்யாமல் இல்லங்கள் மற்றும் விடுதிகளை நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றனர். இது தவிர குழந்தைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சிலர் பதிவு செய்யாமலும், பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும், இதனை கண்காணித்திட மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். விடுதியில் போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு தங்கள் விடுதிகள் மற்றும் இல்லங்களில் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது மேற்கண்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அவ்வாறு ஆய்வின்போது குறைபாடுகளை கண்டறியும் பட்சத்தில் சட்டப்பிரிவு 20-ன் கீழ் விடுதிகள் மற்றும் இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு, சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் மீது காவல் துறையின் மூலம் வழக்கு தொடரப்பட்டு அதிகபட்சமாக மூன்று ஆண்டு காலம் சிறை தண்டணை மற்றும் ரூபாய் ஒரு இலட்சம் அபராதம் விதிக்கப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட துறைகள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் உட்பட மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் இல்லங்களை வருகின்ற 31.08.2022-க்குள் https://www.tnswp.com என்ற இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் கட்டாயம் பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்றவற்றை வருகின்ற 31.08.2022-க்குள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் தனியார் விடுதிகள் மற்றும் இல்லங்கள் நடத்திவரும் அனைத்து விடுதி நிர்வாகிகளும் மேற்கண்ட இணையதளத்தில் விடுதிகள் மற்றும் இல்லங்களை தவறாமல் பதிவு செய்தல், புதுப்பித்தல் பணியிணை வருகின்ற 31.08.2022-க்குள் முடித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி விடுதிகள் மற்றும் இல்லங்களை பதிவு செய்வதற்கான கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம் தரைதளத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை (தொலைபேசி எண்: 04342 233088) தொடர்பு கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு இல்லங்கள் மற்றும் விடுதிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான 1098 என்ற குழந்தைகள் உதவி கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எழுதிருக்க வேண்டும்.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகளையும் உடனடியாக பதிவு செய்திட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாமல் இல்லங்கள் மற்றும் விடுதிகள் நடத்துவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது அரசின் விதிமுறைகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) / ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்ட அலுவலர் திருமதி.ஜான்சிராணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.கவிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஐயப்பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.செல்வம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் நடத்தும் உரிமையாளர்கள், விடுதி காப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக