தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் மதுக்கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகின்றன. பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு இடையூறாக சாலையோரம் செயல்படும் டாஸ்மாக் பாரை மூடக்கோரி நேற்று அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் பார் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அதியமான்கோட்டை போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

