தொப்பூர் அருகே கெட்டுப்பட்டி கிராமத்தில் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கெட்டுப்பட்டி கிராமத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி (வயது 65) என்பவர் தனது வீட்டு அருகில் குப்பைக்கு அடியில் பிளாஸ்டிக் டிரம்மில் சுமார் 50 லிட்டர் சாராய ஊறல் போட்டு வைத்திருந்தது தெரிய வந்தது.
சாராய ஊறல் போட்டு வைத்திருந்தது தொடர்பாக கணபதி, நாகாவதி அணை பகுதியைச் சேர்ந்த முருகன் (46) ஆகிய இருவரையும் தொப்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

