திமுக கூட்டணி சார்பில் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 8- வது வார்டு கவுன்சிலர் உள்பட 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் திமுக தலைமை பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் வேட்பாளராக டி.பிருந்தாவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 பேர் பெரும்பாண்மையோடு அவர் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகியுள்ளது.
1949 -ல் பஞ்சாயத் போர்டு உருவானது முதல் இன்று வரை திமுக சார்பில் தலைவராக இது வரை யாரும் பொறுப்பேற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் திமுக சார்பில் முதன்முதலாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருப்பவரும் இவரே என்ற பெருமை பிருந்தாவையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது, எம்எஸ்சி, பிஎட் பட்டதாரியான பிருந்தா தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் பணியில் இருந்தார்.