Type Here to Get Search Results !

அரசுப் பள்ளி மாணவியை பாராட்டி ரூ.5000 பரிசு வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.

தர்மபுரி மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் சிறப்பிடம் பிடித்து பெற்ற பரிசுத் தொகையினை மாவட்ட ஆட்சியரிடம்  நிவாரண நிதிக்கு வழங்கிய அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா பென்னாகரம் அடுத்த சின்னவத்தலாபுரம் அரசுப் பள்ளியில்   சனிக்கிழமை நடைபெற்றது.

சின்ன வத்தலாபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ்,சந்திரா ஆகியோரின் மகள் செளபரணி (வயது 14). இவர், சின்ன வத்தலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். தருமபுரியில் காந்தி ஜெயந்தி மற்றும் நேரு நினைவு நாளில் மாவட்ட அளவில்  பேச்சு போட்டி நடைபெற்றது.இதில் மாவட்டத்தில் இருந்து 86 மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில்,   சின்னவத்தலாபுரம் அரசுப்பள்ளி மாணவி செளபரணி சிறப்பிடம் பெற்று, தனக்கு பரிசு தொகையாக வழங்கிய 4000 ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார். 

அதனை சிறப்பிக்கும் வகையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி அவர்கள் மாணவி செளபரணிக்கு  அண்மையில்  பாராட்டுக்களை தெரிவித்து நற்சான்றிதழை  வழங்கினார். இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவியை ஊக்குவிக்கும் வகையில், சின்ன வத்தலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மாதையன் தலைமை வகித்தார். 

இதில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவியை கௌரவிக்கும் வகையில் ராம கொண்ட அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா தங்கராஜ், பொது அறிவு புத்தகம், எழுதுகோல் மற்றும் ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் இதுபோன்று பல்வேறு பேச்சுப் போட்டிகளில் மாநில அளவில் சென்று அதில் வரும் தொகையினை பொது நலத் திட்டங்களுக்கு வழங்குவதாக மாணவி செளபரணி தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் அங்கமுத்து, சின்ன வத்தலாபுரம் நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர்கள் சங்க தலைவர் ராஜா உதவி தலைமையாசிரியர் ஜெயமணி, ஊராட்சி செயலர் ராஜேஷ் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies