தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (08.11.2021) நடைபெற்றது.
இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், சாலை வசதி, பேருந்து வசதி, குழந்தைகள் நல மையம், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், புதிய ஆழ்துளைக்கிணறு, தகனமேடை, குடிநீர் வசதி, புதிய மின் இணைப்பு வசதி, பட்டா வேண்டுதல், தரைமட்ட பாலம், முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் 198 மனுக்கள் வரப்பெற்றன.
இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கின்ற மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக இலவசமாக எழுதிக்கொள்ளலாம். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு. அனிதா, தனித்துணை ஆட்சியர் திருமதி. கே.வி.சாந்தி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.