கர்நாடக மற்றும் தமிழக காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கன மழையால் தருமபுரி அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து தற்போது 30 ஆயிரம் கன அடியாக உள்ளது.
தமிழக காவிரி கரையோரங்களிலும், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள மலை மற்றும் வன பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. இந்த மழை நீரானது காவிரி ஆற்றில் கலந்து வருவதால் நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து தற்போது 30 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. இதனால் ஒகேனக்கலில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
வெள்ளப்பெருக்கு காரணமாக அருவி மற்றும் ஆற்று பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே விதக்கப்பட்ட தடையை தொடர்ந்து நீட்டித்துள்ளது. தமிழக மற்றும் கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள நீர்வரத்து அளவிடும் பகுதியில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர். இந்த நீர் வராத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.