தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு கடந்த 24.3.2020 முதல் 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், தனி மனித சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றவும், முக கவசம் கட்டாயம் அணியவும் கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 15.9.2021 வரையில் கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் மதசார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி இல்லை. அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி இல்லை.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட அனுமதி தனி நபர்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும், அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடை செய்யப்படுகிறது. தனி நபர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை அருகில் உள்ள ஆலயங்களின் வெளிப்புறத்திலோ. சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை இந்து அறநிலையத்துறையால் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட விதிமுறைகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம் -2005-ன்கீழ் பிரிவு 51-60 மற்றும் இதச பிரிவு 188 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் அல்லது சிறைதண்டனை விதிக்கப்பட கூடும்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதல் வேண்டும். சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும். அவசியம் இல்லாமல் வீட்டிலிருந்து வெளியில் செல்வதைத் தவிர்த்து தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க முழு ஒத்துழைப்பு வழங்க பொதுமக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.