தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பழங்கற்காலத்தை சார்ந்த ஈமச்சின்னங்கள், தொல்லியல் எச்சங்கள், நடுகற்கள், வரலாற்று தடயங்கள் என கிடைத்தவண்ணமே உள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒரு நாள் தொல்லியல் பயணமாக வரலாற்று ஆர்வலர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.
சதானந்தம் கிருஷ்ணகுமார், சேலம் மோகன், ஆத்தூர் நித்யானந்தம், தருமபுரி பிறைசூடன், பொம்மிடி அருண்குமார், குமரன், சிவராஜ், யாக்கை அமைப்பை சேர்ந்த கோயம்புத்தூர் குமரவேல் இராமசாமி, சுதாகர் நள்ளியப்பன் மற்றும் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தொகரப்பள்ளி சானாரப்பன் மலை அடிவாரத்தில் உள்ள மயிலாடும்பாறை பாறை ஓவியங்கள், புதியகற்காலத்தை சார்ந்த கல்லாயுதங்கள் பட்டை தீட்ட பயன்படுத்திய கற்குழிகள் மற்றும் தமிழக தொல்லியல் துறையினரால் மேற்கொண்டுவரும் மயிலாடும்பாறை அகழாய்வு இடங்களை பார்வையிட்டனர்.
மேலும் தட்டக்கல் கானப்பாறை பாறை ஓவியங்கள், வேலம்பட்டி பொன்னியம்மன் குட்டை கீறல்கள்,கங்கவரம் நடுகற்கள், மகாதேவகொல்லஅள்ளி வணிகக் குழுவின் நில தான கல்வெட்டு மற்றும் தளிஅள்ளி நடுகல் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.
கிராமப்புற மக்களுக்கு பாறை ஓவியங்கள் மற்றும் நடுகற்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி அதனை கண்டறிவது மற்றும் பாதுகாக்கும் அவசியத்தினை விளக்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக