தருமபுரி, ஆகஸ்ட் 12:
தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி. பச்சா கவுண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்திய விண்வெளி ஆய்வு மற்றும் தொடர்புடைய துறைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும், இளநிலை மருத்துவக் கல்வி (MBBS) இடங்கள் வேகமாக தனியார்மயமாகி வருவதை தடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், VBG-RAMG திட்டத்தை கைவிட வேண்டும், இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிலமற்ற தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஈ. அலமேலு, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பி. ரவி, எம். அழகேசன், வெ. பை. மாதையன், என்.பி. ராஜி, எம். குமார், ஜி. ராஜகோபால், வி. செல்வம், ஜி. சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
மேலும், ஏராளமான பெண்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
.gif)

.jpg)