தருமபுரி, ஜூன் 19:
தருமபுரி மாவட்டத்தில் வளர்க்கப்படும் கால்நடைகளின் முழுமையான விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்யும் நோக்கில், தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கத்தின் கீழ் கால்நடைகளுக்கு 12 இலக்க காது வில்லைகள் பொருத்தப்பட்டு தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தின் மூலம், மாவட்டத்தில் உள்ள மாடுகள், எருமைகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு தனித்துவமான 12 இலக்க அடையாள எண் வழங்கப்பட்டு, அவற்றின் முழு விவரங்களும் தேசிய டிஜிட்டல் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட உள்ளன. இந்த பதிவில் கால்நடைகளின் செயற்கை கருவூட்டல் விவரங்கள், கால்நடை காப்பீடு, சினையுறு சதவீதம், கன்று ஈன்ற விவரம், கன்று பிறப்பு விகிதம், உரிமையாளர் விவரங்கள், உரிமையாளர் பெயர் மாற்றம் உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்படும்.
மேலும், கோமாரி நோய், தோல்கழலை நோய், அடைப்பான் நோய் உள்ளிட்ட கால்நடை நோய்களுக்கான தடுப்பூசி பதிவுகள், நோய் பரவல் கண்காணிப்பு அறிக்கைகள் மற்றும் பால் உற்பத்தி தொடர்பான தகவல்களும் இந்த மின்னணு தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தகவல் பதிவேற்றத்தின் போது கால்நடை உரிமையாளர்களின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஒருங்கிணைக்கப்படும். பதிவு செய்யும் நேரத்தில் கால்நடை வளர்ப்போரின் செல்போனுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் கால்நடைகளின் முழு விவரங்களும் உறுதிப்படுத்தப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும்.
இந்த டிஜிட்டல் அடையாள முறை மூலம் கால்நடைகளை வாங்கும் மற்றும் விற்பனை செய்யும் போது, அந்த கால்நடையின் வயது, உடல்நிலை, தடுப்பூசி வரலாறு, இனப்பெருக்க விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இது கால்நடை வளர்ப்போருக்கு பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான பரிவர்த்தனையை உறுதி செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கிராமங்களுக்கு வருகை தரும் போது, கால்நடை வளர்ப்போர் தங்களது செல்போனுக்கு வரும் OTP எண்ணை பகிர்ந்து, கேட்கப்படும் விவரங்களை சரியாக வழங்கி இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கம் மூலம் கால்நடை வளர்ப்புத் துறையில் தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து, நோய் தடுப்பு, இன மேம்பாடு மற்றும் கால்நடை நலத் திட்டங்கள் மேலும் திறம்பட செயல்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.gif)

.jpg)