மொரப்பூர், ஜூன் 22:
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் மேற்கு ஒன்றிய தொண்டரணி சார்பில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
க.ஈச்சம்பாடி ஊராட்சிக்குட்பட்ட க.ஈச்சம்பாடி, பெரமாண்டப்பட்டி, ஈ.அகரஹாரம், கெலவள்ளி மற்றும் மாவடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு அசைவ விருந்து மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள், மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்று சிறந்து விளங்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான உறுதிமொழியும் மாணவர்களிடம் எடுக்கப்பட்டது.
மொரப்பூர் மேற்கு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ந.முனிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மகேஸ்வரன், கோபிநாத், முனிச்சந்திரன், சத்தீஸ்வரன், ஆகாஷ், சூர்யா, கார்த்திக், மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்று மாணவர்களை ஊக்குவித்தனர்.
.gif)

.jpg)