பாலக்கோடு, ஜூன் 22:
மருத்துவக் கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படும் பாலக்கோடு மாணவியின் குடும்பத்திற்கு நீதி, நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வட்டச் செயலாளர் கார்ல் மார்க்ஸ் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் சம்சீர் அகமது, நீட் தேர்வால் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் கல்வி சமத்துவ பாதிப்புகள் குறித்து விளக்கி கண்டன உரையாற்றினார். மேலும் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவி மரண சம்பவத்திற்கு உரிய விசாரணை நடத்தி குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டக்குழு உறுப்பினர்கள் முருகன், பி.கோவிந்தசாமி, என்.வரதராஜன், சி.ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். இறுதியாக வட்டக்குழு உறுப்பினர் ஏ.சேகர் நன்றி கூறினார்.
.gif)

.jpg)