தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முத்தம்பட்டி கிராமத்தில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த கறவை மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கவேல் (47) தனது நிலத்தில் கறவை மாட்டை மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார். புல் மேய்ந்து கொண்டிருந்த மாடு திடீரென அருகிலிருந்த சுமார் 40 அடி ஆழமான விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.
மாட்டின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தங்கவேலின் மனைவி செந்தாமரை, கிணற்றில் சுமார் 20 அடி அளவு தண்ணீரில் மாடு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த நிலைய அலுவலர் திருத்தணிமுருகன் தலைமையிலான மீட்பு குழுவினர், சிறப்பு நிலை அலுவலர் தெய்வம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ராஜ்குமார், கார்த்திக் உள்ளிட்டோர் இணைந்து கயிறு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் கிணற்றுக்குள் இறங்கி, கறவை மாட்டை பாதுகாப்பாக உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
இந்த துரிதமான நடவடிக்கையால் மாடு உயிர் பிழைத்தது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

