தருமபுரி | பிப்ரவரி 09:
தருமபுரி மாவட்டம், நார்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
1997-ஆம் ஆண்டு, தருமபுரி வட்டம், ஏ. ரெட்டிஅள்ளி வருவாய் கிராமம், புல எண் 440/1B1, 440/1B2 ஆகிய இடங்களில் மொத்தம் 7.73 ஏக்கர் நிலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு, 134 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2004-ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை (NH-7) விரிவாக்கப் பணிகளின் போது, இந்நிலத்தின் ஒரு பகுதி நெடுஞ்சாலை திட்டத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் பின்னர், கிழக்கு பகுதியில் உள்ள புல எண் 440/1B1C-யில் 8,300 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தை நார்தம்பட்டி அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 30.01.2026 மற்றும் 31.01.2026 ஆகிய தேதிகளில், குறித்த இடத்தில் சட்ட விரோதமாகவும் அராஜகமான முறையிலும் ஆக்கிரமிப்பு செய்து கல் நட்டு முள் வேலி அமைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இது நார்தம்பட்டி அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க ஒதுக்கப்பட்ட இடம் என தகவல் பலகை அமைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)