மாரண்டஅள்ளி, அக். 11 -
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
முகாமை திமுக ஒன்றிய செயலாளர் பஞ்சப்பள்ளி அன்பழகன், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், செயல் அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, பேறுகால மருத்துவம், குழந்தை நலம், இதயநல சிறப்பு மருத்துவம், நரம்பியல், நுரையீரல், நீரிழிவு உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசு செயல்படுத்தி வரும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் பொதுமக்களின் மருத்துவ தேவைகளை நேரடியாக பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
முகாமில் பொதுமக்களுக்கு முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் அவர்கள் முகாமினை நேரில் பார்வையிட்டு, மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுடன் கலந்துரையாடி, மருத்துவ சேவைகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், சுகாதார துறை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் சுமார் 3,000 பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் மதிய உணவு வழங்கினார்.