ஓகேனக்கல், ஆடவை (ஆனி) 11-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடகாவின் கபினி அணைக்கு நீர்வரத்து பெரிதளவில் அதிகரித்துள்ளது. இதையடுத்து 45,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
பெரிதளவில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றுப் பகுதியில் கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், அத்தியாவசிய அறிவுறுத்தல்களை கடைபிடித்து, ஆற்றுப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், தற்போது நீர்வரத்து இன்னும் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை உள்ளதால் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.