Type Here to Get Search Results !

ஜனவரி 2024 முதல் ஜீன் 2024 வரை 6 மாதங்களில் போக்குவரத்து துறையின் சார்பாக தணிக்கையில் ரூ.69,51,900/- வசூல்.


தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2024 முதல் ஜீன் 2024  வரை 6 மாதங்களில் போக்குவரத்து துறையின் சார்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன் அவர்கள் தலைமையில், தருமபுரி மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.அ.க.தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.கு.வெங்கிடுசாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அதில், ஏறத்தாழ 7589 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 2984 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக 356 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.  மேலும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 155 வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற 86 வாகனங்களுக்கும், அனுமதீச்சீட்டு இல்லாமல் இயக்கிய 97 வாகனங்களுக்கும், அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 1201 வாகனங்களுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கிய 195 வாகனங்களுக்கும், காப்புச்சான்று/புகைச்சான்று இல்லாமல் இயக்கிய 556 வாகனங்களுக்கும், சிகப்பு நிற பிரதிபலிப்பான் இல்லாமல் இயக்கிய 352 வாகனங்களுக்கும் மற்றும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 211 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் பொழுது அபராதம் விதிக்கப்பட்டது.


மேற்கண்ட வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை வரியாக ரூ.32,68,244/- (முப்பத்திரண்டு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து இருநூற்று நாற்பத்து நான்கு மட்டும்) மற்றும் இணக்க கட்டணமாக ரூ.36,83,656/- (முப்பத்தாறு லட்சத்து எண்பத்து மூவாயிரத்து அறுநூற்று ஐம்பத்தாறு மட்டும்) ஆக மொத்தம் ரூ.69,51,900/- (ரூபாய் அறுபத்தொன்பது லட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து தொள்ளாயிரம் மட்டும்) உடனடியாக வசூலிக்கப்பட்டது.  


மேலும், இந்த வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.73,93,300/- (எழுபத்து மூன்று லட்சத்து தொண்ணூற்று மூவாயிரத்து முந்நூறு மட்டும்) நிர்ணயம் செய்யப்பட்டது.  கடந்த ஐனவரி 2024 முதல் ஜீன் 2024 மாதம் வரை 6 மாதங்களில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக அரசுக்கு வாகன சோதனை மூலம் மொத்தம் ரூ.1,43,45,200/- (ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து மூன்று லட்சத்து நாற்பத்தைந்தாயிரத்து இருநூறு மட்டும்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 


மேலும், தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேகவரம்பான 30கி.மீ. மேல் இயக்கப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் வேகம் கண்காணிக்கும்  கருவி (Speed Radar Gun)  உதவியுடன் கடந்த 3 ஆண்டுகளில் 13,177 வாகனங்களுக்கு e-Challan மூலம் ரூ.95,46,275/- (ரூபாய் தொண்ணூற்று ஐந்து லட்சத்து நாற்பத்தாறாயிரத்து இருநூற்று எழுபத்து ஐந்து மட்டும்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் த.தாமோதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies