தருமபுரி மாவட்ட சமூகநல அலுவலர்கள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தினை மாவட்ட அளவில் செயல்படுத்திட வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் அறிவுறுத்தினார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் (26.06.2024) அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டமானது 2022 – 2023 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 6- ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வீதம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேற்படிப்பிற்காக பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் சேரும் அனைத்து மாணவியரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகத்தில் புதிய கணக்கு தொடங்கி உங்கள் கல்லூரியில் நியமிக்கப்பட்ட புதுமை பெண் திட்ட கல்லூரி நோடல் அலுவலர் (Nodal Officer) மூலம் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது,
புதுமைப்பெண் திட்டதில் புதியதாக விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்காமல் இருப்பவர்கள் காலதாமதம் ஏற்படுத்தாமல் இணைக்கும் மாறும், மாத மாதம் மாணவிகளுக்கு 1000 ரூபாய் பணம் செல்வதை புதுமைப்பெண் திட்ட கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்து கொள்ளவும், விரைவில் மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டம் துவங்க உள்ளதை தொடர்ந்து தகுதியுள்ள கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தங்கள் வங்கி கணக்கு விவரங்களை ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து தயார் நிலையில் இருக்குமாறு அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அனைத்து கல்லூரிகளில் உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும் எனவும், உள்ளக புகார் குழு அமைக்காத கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து கல்லூரி முதல்வர்களுக்கு பணிபுரியும் இடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் 2013 குறித்த பயிற்சி கையேடுகளையும், பாதுகாப்பு பெட்டிகளையும் (Safety Box ) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. பவித்ரா, EMIS ஒருங்கிணைப்பாளர் திரு.சுதாகர், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) திருமதி.மான்விழி, மாவட்டம் மின்னணு மேலாளர் திருமதி.பூங்கோதை, அனைத்து கல்லூரி புதுமைப்பெண் திட்ட நோடல் அலுவலர்கள், இந்திய அஞ்சல் கட்டண வங்கி மேலாளர் மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)