மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கிவைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 ஜூன், 2024

மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கிவைத்தார்.


தடங்கம் ஊராட்சியில் 200 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. தருமபுரி மாவட்டம், தடங்கம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 5-ஆம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி அவர்கள் இன்று தொடங்கிவைத்தார்.

தருமபுரி மாவட்டம், தடங்கம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 5-ஆம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி அவர்கள் இன்று (10.06.2024) தொடங்கிவைத்தார். கோமாரி நோய் இரட்டைக் குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோய் ஆகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர் மற்றும் பண்ணைக்கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. கோமாரி நோயினால் மாடுகளில் சினைபிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், தோல் மற்றும் தோல் பொருட்களின் மதிப்பு இறக்கம், எருதுகளின் வேலைதிறன் பாதிப்பு மற்றும் கன்றுகளில் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு பெரும் இழப்பு நேரிடுகிறது.


இக்கொடிய நோயை தடுக்கும் பொருட்டு கோமாரி நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 5 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மாட்டினம் மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம் (NADCP) 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் 10.06.2024 இன்று முதல் 30.06.2024 வரை நடைபெற உள்ளது. 


தருமபுரி மாவட்டத்திற்கு 3,47,500 டோஸஸ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3,56,000 டோஸஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. கால்நடை உதவி மருத்துவர்கள் அடங்கிய 83 குழுக்கள் அமைக்கப்பட்டு, இப்பணி அனைத்து குக்கிராமங்கள், மலை கிராமங்களில் உள்ள மாடுகள், எருமைகளுக்கு செலுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.


இதனை தொடர்ந்து, கால்நடை வளர்ப்போர்களிடம் கால்நடைகளுக்கான தாது உப்புக்கலவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார், இந்நிகழ்வில் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு. சுவாமிநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தடங்கம் பெ.சுப்பிரமணி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மகேஸ்வரி பெரியசாமி, ஊராட்சிமன்ற தலைவர் திருமதி. கவிதா முருகன், உதவி இயக்குநர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad

-->