அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 19 டிசம்பர், 2023

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி.


தருமபுரி மாவட்டம், அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (19.12.2023) தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமைவகித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.


தமிழ்நாடு அரசால் பேருந்து வசதி இல்லா குக்கிராமப் பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் தடைபடாமல் இருக்கவும், அவர்கள் தொடர்ந்து சிறந்த முறையில் கல்வி கற்கவும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 5,783 மாணவர்களுக்கு தலா ரூ.4,900/- மதிப்பிலும், 6,717 மாணவிகளுக்கு தலா ரூ.4,760/- மதிப்பிலும் என மொத்தம் ரூ.6.03 கோடி மதிப்பீட்டில் 12,500 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. 


இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் 2023-2024 கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டில் ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் 13,367 மாணவ மாணவிகளுக்கும், 2021-22 ஆம் கல்வி ஆண்டில் ரூ.8.75 கோடி மதிப்பீட்டில் 17,218 மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான திட்டங்களுள் ஒன்று புதுமைப்பெண் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்நிதி உதவியினை உயர்கல்விக்கு உத்திரவாதமாக மாணவிகள் பயன்படுத்தி கொண்டு, சிறந்த கல்வியை கற்பதோடு, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் தங்களை தயார் படுத்திக்கொண்டு உயர்ந்த இடத்தை மாணவிகள் அனைவரும் எட்டவும், உயர்கல்வி என்பதை உங்கள் இலக்காகவும் கொண்டு வாழ்வில் வெற்றியடைய வேண்டும்.


மாணவ, மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயணச்சலுகைகள் வழங்கும் திட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செயல்படுத்தினார்கள். இதனால் இன்றும் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றார்கள். மேலும், மாணவர்களுக்கு ஊட்டச்சத்து தேவை என்பதை உணர்ந்து பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் முட்டை வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகின்றது. தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகின்ற மிதிவண்டிகளை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தி நல்ல முறையில் கல்வி பயில்வதோடு, ஆரோக்கியத்தையும் பேண வேண்டும்.


மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல மனிதனாக உருவாவதற்கு அடிப்படை கல்வி. அதை கற்பிப்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் சொல்லுகின்ற அறிவுரைகளையும், கற்பிக்கின்ற பாடங்களையும் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். அவர்கள் கற்று கொடுக்கின்ற பாடங்களை முழுமையாக கற்றுகொள்ள வேண்டும். உங்களின் எதிர்காலத்திற்காக உழைத்து கொண்டிருக்கின்ற ஆசிரியர்களுக்கு மாணவர்களும், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு அளித்து மாணவர்களின் கல்வி அறிவு உயர்வதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.


தருமபுரி மாவட்டத்தில் தான் தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் முதன்முதலில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு அரசு நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் விடியல் பயணம் திட்டம், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் 33 சதவிகித இடஒதுக்கீடு மற்றும் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட பெண்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


மாணவ, மாணவியர்களின் நலனுக்கென தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை சிறந்தமுறையில் பயன்படுத்தி சிறப்பான கல்வியை பயின்று மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.வில்சன் ராஜசேகர், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஜி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மனோகரன், திருமதி. வேடம்மாள், மாநில கைம்பெண் வாரிய உறுப்பினர் திருமதி.ரேணுகாதேவி, அரூர் பேரூராட்சித் தலைவர் திருமதி. இந்திராணி தனபால், பாலக்கோடு பேரூராட்சித் தலைவர் திரு. பி.கே. முரளி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி) திரு. வி.விஜயகுமார், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.எம்.ஜீவாகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியர்கள் திரு.லட்சுமணன், திருமதி.ராணி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

-->