Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ் ஊரக சாலைகள் கருத்தரங்கம்.

Top Post Ad

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 2107 குக்கிராமங்களில் இதுவரை 2102 குக்கிராமங்கள் சாலை வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 குக்கிராமங்களுக்கும் சாலை வசதிகளுடன் இணைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் இன்று நடைபெற்ற பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ் ஊரக சாலைகள் குறித்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் பேச்சு.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ் ஊரக சாலைகள் கருத்தரங்கம் இன்று (18.08.2021) நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ். செந்தில்குமார் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். இக்கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை ஏற்று பேசும்போது தெரிவித்ததாவது:

பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 1,2,3 என மூன்று பகுதிகளாக கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் இதுவரை (2021) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் - 1 - பகுதி முதல் XI - ன் கீழ், (2000-01 முதல் - 2018-19 வரை) ரூ.142.65 கோடி மதிப்பீட்டில் 407.352 கி.மீ நீளமுள்ள 234 சாலைப்பணிகள் மற்றும் 3 பாலங்கள் எடுக்கப்பட்டு, இதுவரை 406.367 கி.மீ நீளமுள்ள 234 சாலைப்பணிகள் மற்றும் 3 பாலங்கள் ரூ.116.94 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் II ஒன்றிய அரசால் 2013-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பிரதம மந்திரி சாலை திட்டம் II -ல் குக்கிராமங்களின் இணைப்பு சாலையினையும் மாவட்டத்தின் முக்கிய சேவை வசதி கொண்ட வளரும் மையங்களை இணைக்கும் பிரதான சாலை (F-Route) மற்றும் முக்கிய ஊரக இணைப்பு சாலைகளை (Major Rural Link ) மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராமசாலைத் திட்டம் -1-ன் கீழ் 2017-18 மற்றும் 2018-19-ஆம் ஆண்டுகளில் ரூ.31.43 கோடி மதிப்பீட்டில் 89.24 கி.மீ நீளமுள்ள 25 சாலைப் பணிகள் மற்றும் 1 பாலம் எடுக்கப்பட்டு, இதுவரை 89.18 கி.மீ நீளமுள்ள 25 சாலைப் பணிகள் மற்றும் 1 பாலப்பணி ரூ.31.92 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் III, ஒன்றிய அரசால் 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கமானது, குக்கிராமங்களில் இருந்து சந்தை, உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றை இணைக்கும் பிரதான சாலை மற்றும் முக்கிய ஊரக இணைப்பு சாலைகளை மேம்படுத்துவதே ஆகும். பிரதம் மந்திரி கிராம சாலைத் திட்டம் III-ன் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முக்கிய ஊரக சாலை மற்றும் பிரதான இணைப்பு சாலை அடங்கிய சாலைகளை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான சாலையின் நீளம் குறைந்தது 5 கி.மீ இருக்க வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான சாலையின் தற்போதைய தளத்தின் பழுதடைந்த தன்மை மற்றும் குறைந்த நீளம் 4.00 கி.மீ மேல் உள்ள சாலைகள் மட்டுமே தகுதி பெறத் தக்கதாகும். தருமபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் - III-ன் கீழ் 2019-20 மற்றும் 2020-21-ஆம் ஆண்டுகளில் ரூ.60.21 கோடி மதிப்பீட்டில் 117.48 கி.மீ நீளமுள்ள 28 சாலைப் பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை 76.85 கி.மீ நீளமுள்ள 17 சாலைப் பணிகள் ரூ.32.82 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் வளர்ச்சியில் சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அத்தகைய சாலைகளை தரக்கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி தரமானதாக அமைக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் வேகத்தடை மற்றும் வளைவுகள் குறித்த அறிவிப்பு பலகைகளையும் இடம்பெற செய்ய செய்ய வேண்டும். இதன்மூலம் விபத்து ஏற்படுவதை தடுக்க இயலும். சாலைப்பணிகளை தரமானதாக அமைப்பதில் அரசு அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2107 குக்கிராமங்களில் இதுவரை 2102 குக்கிராமங்கள் வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 குக்கிராமங்களுக்கும் வசதிகளுடன் இணைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் இதுவரை சாலைவசதி கிடைக்கப் பெறாத குக்கிராமங்களில் சாலை வசதி ஏற்படுத்திட பிற துறைகளின் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அப்பகுதிகளுக்கும் சாலை அமைக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் பேசினார். இக்கருத்தரங்கில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு. இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி முகமை திரு.முத்துசாமி, உதவி இயக்குநர் ஊராட்சி திரு.சீனிவாச சேகர், தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி துறைத்தலைவர் (சிவில்) திரு.டி.சரத்குமார், உதவி திட்ட அலுவலர்கள் திருமதி.உஷாராணி (உட்கட்டமைப்பு-II), திருமதி.உமாநந்தினி (வீடுகள் மற்றும் சுகாதாரம்), திருமதி. மிரியம் ரெஜினா (வேலைவாய்ப்பு), உதவி செயற்பொறியாளர்கள் திரு.குமரேசன், திரு. இராமசந்திரன், திரு. இராதாகிருஷ்ணன், திரு.சம்பத், திரு. செந்தில்குமார், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் திரு. நீலாபுரம் செல்வம் (தருமபுரி), திருமதி பாஞ்சாலை கோபால் (பாலக்கோடு), திருமதி. பொன்மலர் பசுபதி (அரூர்), திருமதி. கவிதா இராமகிருஷ்ணன் (பென்னாகரம்), திருமதி.மகேஸ்வரி பெரியசாமி (நல்லம்பள்ளி), திரு.பெரியசாமி (ஏரியூர்), திருமதி.சுமதி செங்கண்ணன் (மொரப்பூர்), திருமதி.கு.உண்ணாமலை (பாப்பிரெட்டிப்பட்டி), திருமதி. உதயா மோகன சுந்தரம் (கடத்தூர்), உதவி பொறியாளர்கள் திரு.த.ஸ்ரீனிவாசன், திருமதி.க. காயத்திரி ஆகியோர் உட்பட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hollywood Movies