அமைச்சர் தலைமையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள் - ஆய்வுக்கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 ஜூலை, 2021

அமைச்சர் தலைமையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள் - ஆய்வுக்கூட்டம்.


தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஒகேனக்கல் கூட்டு
குடிநீர் திட்ட செயல்பாடுகள் குறித்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் பேசியதாவது:தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு புளோரைடு தன்மையில்லாத பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். 

இந்த திட்டம் 2006-11 திமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு ஜப்பான் நாட்டு நிதி உதவி பெறப்பட்டு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. திட்டத்தின் பெரும்பகுதி பணிகள் முடிந்திருந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.


திட்டம் பயன்பாட்டுக்கு வந்தபோதும் அனைத்து மக்களுக்கும் இத்திட்ட குடிநீர் சென்று சேரவில்லை எனவும், ஒகேனக்கல் குடிநீருடன் நிலத்தடி நீரையும் கலந்து விநியோகிப்பதால் புளோரைடு பாதிப்பு தொடர்வதாகவும் குறைகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து அவற்றை கண்டறிந்து நீக்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் விநியோகம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி விநியோகிக்கப்படும் குடிநீரில் 1.5 மில்லி கிராம் அளவில் மட்டுமே புளோரைடு கலந்து இருப்பதாக கூறப்பட்டது. 


மேலும், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் மனிதர்களுக்கான தண்ணீர் தேவை அதிகரிப்பு ஆகியவை காரணமாக ஒகேனக்கல் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினை ஏற்படுகிறது. இதைசரிசெய்ய உள்ளாட்சி நிர்வாகங்கள் நிலத்தடி நீரை ஒகேனக்கல் குடிநீருடன் கலந்து விநியோகம் செய்து வந்துள்ளனர். குடிநீர் தொட்டி அமைக்காதது, மின் இணைப்பு வசதி இல்லாமை, அதிக உயரமான இடத்தில் குடியிருப்புகள் இருப்பது போன்ற காரணங்களால் சில பகுதிகளுக்கு இதுவரை ஒகேனக்கல் குடிநீர் இன்னும் சென்று சேராமல் உள்ளது. 


ஓரிரு வாரங்களுக்குள் இந்த பிரச்சினைகளை எல்லாம் சரிசெய்து முறையாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் குடிநீர் தொட்டிகள் தேவையுள்ள இடங்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அனுமதி பெற்று நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். தினமும் 120 எம்எல்டி வரை ஒகேனக்கல் நீர் அனுப்பப்படும் போதும் பற்றாக்குறை நிலவுகிறது. 


இது நிரந்தரமாக சரிசெய்யப்படும் வரை பொதுமக்களும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஒகேனக்கல் நீரை குடிக்கவும், சமைக்கவும் மட்டும் பயன்படுத்தவும், இதர தேவைகளுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்தவும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது என மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் பேசினார்.


முன்னதாக தருமபுரி ஊராட்சி ஒன்றியம் அதகபாடி கிராமத்தில் மாண்புமிகு
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் விநியோகம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து பென்னாகரம் பேரூராட்சி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நீரேற்று நிலையம் நீருந்து நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் நார்த்தம்பட்டி கிராமத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பாகவும் கள ஆய்வு மேற்கொண்டார். 


இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குநர் திரு.வெ.தட்சணாமூர்த்தி,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர்கள் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப.,(தருமபுரி) டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இஆப., (கிருஷ்ணகிரி) நாடாளுமன்ற உறுப்பினர் மரு.செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜி.கே.மணி (பென்னாகரம்), திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன்(தருமபுரி), திரு-ஒய்.பிரகாஷ் (ஒசூர்) கூடுதல் ஆட்சியர் (திட்ட இயக்குனர், மாவட்ட வளர்ச்சி முகமை) மரு.வைத்தியநாதன்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கே.இராமமூர்த்தி, தருமபுரி உதவி ஆட்சியர் திருமதி. சித்ரா விஜயன்,இ.ஆ.ப.,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் திரு.செங்குட்டவன், கண்காணிப்பு பொறியாளர் திரு.மணிகண்டன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.பெரியசாமி(கிருஷ்ணகிரி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.சீனிவாசசேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.கண்ணன், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்/ செயற்பொறியாளர் திரு.சங்கரன், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.