இராஜகோபுரம் கட்டித்தர கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜூலை, 2021

இராஜகோபுரம் கட்டித்தர கோரிக்கை.

40 ஆண்டுகளுக்கு முன் கம்பீரமாக காட்சியளித்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில்  ராஜகோபுரம், இடிந்ததை மீண்டும் கட்டி தர கோரிக்கை.

சிவனை மதிக்காமல் பார்வதியின்  தகப்பனார்,  தக்சன் நடத்திய யாகத்திற்கு விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட அனைத்து தேவர்களையும் அழைத்துள்ளார்.  தன்னை மதிக்காமல் நடைபெற்ற யாகத்தில் பங்கேற்க அனைத்து  தேவர்களும் சென்றதால் கோபமடைந்த சிவன் அவர்கள் கண்களுக்கு புலப்படாமல் இருக்க தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே தீர்த்தமலை கிராமத்தில் அமைந்துள்ள தீர்த்தகிரிமலைக்கு வந்து தவம் மேற்கொண்டதாக வரலாறு  கூறுகிறது. 

ராமாயண காலத்தில் ராவணன் சீதையை சிறை பிடித்துச் சென்றபோது அவரை மீட்கும் போரில் இராமனால் இராவணன் கொல்லப்படுகிறார். அப்பொழுது ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொள்ளவே, தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் முதல் காலப் பூஜையை முடித்துக்கொண்டு, இரண்டாம் கால பூஜைக்காக  தீர்த்தகிரி மலையில் எழுந்தருளியுள்ள  தீர்த்தகிரீஸ்வரர் கோயிலுக்கு வந்தனர்.அவர் நீராடி பூஜை செய்வதற்கு தண்ணீர் இல்லாததால் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி  அதில் நீராடி சிவனை பூஜை செய்து தோஷம் நீக்கியதாக புராணம் கூறுகிறது. ராமனால் உருவாக்கப்பட்ட தீர்த்தம், இன்று வரை  ராம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப் பெற்ற ஒரே தலம் இதுவாகும்.

வரலாற்றுப் புகழ் பெற்ற  இந்த  அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அமாவாசை ,பவுர்ணமி நாட்களில் பிற மாவட்ட, மாநிலங்களில் இருந்து  ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மாசி  மகா தேரோட்டம் பதினோரு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது வழக்கம். தீர்த்தகிரிமலை மீது எழுந்தருளியுள்ள அருள்மிகு  தீர்த்தகிரீஸ்வரர் கோயில் நுழைவாயிலில் இருந்த ராஜகோபுரம் 40 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அப்போது கோவில் நிர்வாகம் ராஜகோபுரம் இருந்த இடத்தை பழுது பார்த்து சரி செய்தது. அன்று முதல் இன்று வரை ராஜகோபுரம் இல்லாமல் இருந்து வருகின்றது. இந்தக் கோயிலை சீரமைத்து சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தற்பொழுது சம்பந்தப்பட்ட துறை மூலம்  அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் திருப் பணிகள் தொடர்பான மண்டல அளவிலான நடைபெற்ற கூட்டத்தில்  அங்கீகாரம் வழங்கப்பட்டு, மாநில கூட்டத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் இடிந்து விழுந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. மேலும் மலை அடிவார அமைந்துள்ள தீர்த்தகிரீஸ்வரர்  கோயில் நுழைவாயிலில் ராஜகோபுரம் இல்லாமல் காட்சியளித்தது வருகிறது. இரண்டு நுழைவாயிகலில் ராஜகோபுரம்  அமைத்து குடமுழுக்கும் செய்து சுற்றுலாத்தலமாக தமிழக அரசு விரைவில் அறிவித்து, கோவிலுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து  அவற்றை மீட்டெடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad