விவசாயிகள் மற்றும் பொது மக்கள் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகளை 50% அரசு மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 ஜூன், 2023

விவசாயிகள் மற்றும் பொது மக்கள் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகளை 50% அரசு மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.


தருமபுரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகளை 50% அரசு மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. தருமபுரி மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் 50% மானியத்தில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் (250 கோழிகள் / அலகு) அமைக்கும் திட்டத்தின்கீழ் மூன்று அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின்கீழ் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிக்கான மொத்த செலவில் 50% மானியம் ரூ.1,50,625/- மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50% பங்களிப்பு தொகை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதராங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.


பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி கொட்டகை கட்ட மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்கும் வகையில் குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையும், தாழ்த்தப்பட்ட/பழங்குடியினருக்கு 30% ஒதுக்கீடும் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.


விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களது ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்) மூன்று வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23 ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றுடன் விண்ணப்பித்தினை அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகங்களில் 28.06.2023 க்குள் சமர்ப்பித்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.


மேலும் விபரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம் கால்நடை பராமரிப்புத்துறை தருமபுரி அல்லது உதவி இயக்குநர் அலுவலகங்கள் தருமபுரி மற்றும் அரூர் ஆகியவற்றை அணுகி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad