தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வுகளை முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான திரு.மு.குணசேகரன் இன்று தொடங்கி வைத்தார்.நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாகவும் சமரச முறையிலும் தீர்த்து வைப்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் மாண்பமை தேசிய சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் உதரவின்படியும் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மாண்பமை தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் இன்று 10.07.2021 ஆம் தேதி காலை 10 மணி அளவில் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொடங்கியது. இதுபோன்று தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு, பென்னாகரம், மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட நான்கு தாலுகா நீதிமன்ற வளாகத்திலும் தெடங்கியது.
இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்கு காசோலை மோசடி வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, உரிமையியல் வழக்கு, குடும்ப பிரச்சனை வழக்கு, தொழிலாளர் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு, சமரச முறையில் இன்றே தீர்வு காணப்படவுள்ளது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ நீதிமன்றங்களில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ள கூடிய, மேற்கண்ட பிரிவு வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம் என முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான திரு.மு.குணசேகரன் அவர்கள் தெரிவித்தார்.