தருமபுரி, ஏப்ரல். 30:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் மற்றும் தபால் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான திரு. ரெ. சதீஸ் அவர்கள் தலைமையேற்றார்.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாக்குகள் எண்ணும் பணி மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக மொத்தம் 465 அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், முற்பகலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்கான 275 அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து பிற்பகலில் தபால் வாக்குகள் எண்ணும் பணிக்கான 190 அலுவலர்களுக்கு தனித்த பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியின் போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி எவ்வாறு பிழையின்றி வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவான ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா. கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு. பாலசுந்தரம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. எஸ். இராமஜெயம், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு. அன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)